நம் எண்ணங்களை அப்படியே எழுத்தாலோ சொற்களாலோ வடிக்க முடிகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் முழுதாய் வடிக்கும் சொற்கள் மிகக் குறைவுதான் நினைப்பதை பாதி மட்டுமே அடைத்து அனுப்ப இயலுகிறது மீதங்கள் அப்படியே நம் மனகிடங்குகளில் அடைபட்டு கிடக்கிறது .
நம் எண்ணங்கள் வலிமையானவை , விரிவானவை, வேகம் கொண்டவை, நம் எண்ணத்தை சொற்களால் மொழி பெயர்க்க முயற்சி செய்கிறோம் .நம் சிந்தனையை சொல் வடிவமாக மாற்றும் போது அது நீர்த்துப் போகிறது எண்ணங்களுக்கு தகுந்த சொற்கள் கிடைக்காமல் நாம் சிரமபடுகிறோம்.
அந்த சரியான தாய்ச் சொல் கிடைக்காதபோது சிலநேரம் நாம் செவிலித்தாயை போல சில உபரி வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் நம்முடைய சொற்களில் எண்ணங்கள் ,அனுபவங்கள் குணங்கள் அதிகம் .உணருவதை உணர்வின் மூலம்தான் முழுமையாக வெளிபடுத்த முடியும் சொற்களின் மூலம் வெளிபடுத்த இயலாது .
பேசும் போது முழுவதுமாக நம் எண்ணத்தை வெளிபடுத்த இயலாத போது சோர்வு ஏற்படுகிறது அந்த சோர்வு நம்மை மௌனமாக்குகிறது .சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க நிறைய தேட வேண்டும் தங்கள் எண்ணத்தை ஓரளவாவது வெளிபடுத்தும் சொற்கள் கிடைக்காதவரை நாம் எழுத கூடாது .அப்படியே எழுதினாலும் அது திருப்தியை தருவதாக இருக்காது .
சொற்களை தேடுவது என்பது நம் எண்ணங்களை சலிப்பது ஆகும் .ஒரு தேனீ பல்வேறு விதமான பூக்களை ஆராய்ந்து புலனறிந்து தேனைத் திரட்டி கொண்டு வந்து தேன் கூட்டில் சேகரிக்கிறது அதற்க்கு எத்தனை நாட்கள் செலவிட்டு இருக்கும் அதன் உழைப்பை நாம் எண்ணி பார்ப்பதில்லை அதை துரத்திவிட்டு அபகரிக்கவே நாம் பார்க்கிறோம் .
அந்த தேனிக்கள் மகரந்தத்தை தேர்ந்தெடுத்து தேனாக ரசவாதம் செய்வது போல நாமும் சொற்களை தேடிச் சலித்து நம் எண்ணங்களுக்கு தகுந்த சொற்களை மொழி பெயர்க்க வேண்டும் .
மல்லிகையின் மணமும் ரோஜாவின் மணமும் வேறாக இருந்தாலும் அவற்றை வேறு வகை படுத்தி சொற்களால் சொல்ல இயலுவதில்லை .அப்படித்தானே அன்பை ,காதலை,மௌனத்தை நம்மால் மொழி பெயர்க்க முடிவதில்லை .
காதல் வந்த பின் கதையும் கவிதையும் எழுதுபவர்களை பாருங்கள் அந்த காதலை சரியான சொல்லில் அவர்களால் சொல்ல முடியாமல் திணறுவார்கள் ஆனால் முழுமையாக உணருவார்கள் அப்படிதான் .எந்த சொல் நம் எண்ணத்திற்கு நெருக்கமாக இருக்கிறதோ அதை அங்கீகரிக்கிறோம்..
ஆகவே சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் கொள்ளுங்கள் நிறைய தேடுங்கள் சரியான சொற்களில் எண்ணங்களை பரிமாறுங்கள் அப்போது அதை பருகுபவர்களால் அதன் முழுமையை உணர முடியும் அதன் வீரியம் தெரியும் ,வலிமை புரியும் .
அதே போல சொற்கள் சொல்லுபவர்களை விட கேட்பவர்களைத்தான் பாதிக்கிறது ஆகையால் கவனமாக சொற்களை உபயோகியுங்கள் தேவையற்ற பயனற்ற சொற்களை நீங்கள் சொல்லும்போது அது கேட்பவரின் செவியை சிராய்த்து செல்லுமே தவிர பயன் இருக்காது .
ஆகவே புலன்களை திறந்து சொற்களை கவனமாக உள்வாங்குங்கள் அவை முழுமையாக உங்களுக்குள் வந்தபின் அதன் சுவை அறியுங்கள் அதன் பின் மற்றவர்களுக்கு பரிமாறுங்கள் அப்படிப்பட்ட தேர்ந்த சொற்கள் கல்வெட்டுகளை போல சொல்வெட்டுகளாய் மனதில் சொக்கி நிற்கும் .
(ஓசை தொடரும் )