எவன்டா என் பொண்டாட்டிய வச்சிருகிறது ?அடியே ..இன்னும் அஞ்சு நிமிசத்துல நீ வெளியே வராட்டி இங்க கொலை விழும் .." இந்த குடிபோதை அலறல் அந்த நிசப்த வேளையில் திடீர் என்று தெருவை அதிர வைக்கிறது நேரம் 11.30ஒவ்வொரு நாளும் கணவன் அடிக்கும் உதைக்கும் ,சித்திரவதைக்கும் பலிகடாவாக இருக்கும் அந்த பெண் மூன்று குழந்தைக்கு தாய் வயிற்றில் நாலாவதாக ஒரு சிசு வேறு தன மூன்று குழந்தைகளையும் எதிர்வீட்டு பெண்ணிடம் தஞ்சம் இருக்க செய்துவிட்டு தன் வீட்டுக்குள் வருகிறாள் .
" என்னடி ...ஓடி ஒளியர ? நீ எங்கயும் போக முடியாது உன்னாலும் என்னை ஒன்னும் செய்ய முடியாது .நல்லா புரிஞ்சுக்கோ " என்று மிரட்டிவிட்டு தாடையை நிமிர்த்தி கன்னத்தில் ஓங்கி அறைகிறான் .வலி தாங்க முடியாமல் துடித்து போனால் அவள் .இது நேற்று இன்று இல்லை கடந்த ஐந்தாண்டுகளாக எதிர்கொள்ளும் வலி .
இதற்கு முற்றுபுள்ளி வைப்பது எப்போது என்று வெளியில் காட்டமுடியாத வெறியோடு இருந்த அவள் இன்று எப்படியாவது தன எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று நினைத்தால் மீண்டும் அடிக்க கையை ஓங்கிய போது கையில் ஒரு மரக்கட்டையை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்து அவனை விழச்செய்தாள் ஓவென்று கத்தினான் வலி தாங்க முடியாமல். எத்தனை முறை காரணமில்லாமல் அவளை அடித்திருப்பான்.தன காம பசிக்காக அவளை பலிகடாவாக்கியிருப்பான். அந்த உடலும் மனமும் என்ன பாடு பட்டு இருக்கும் யோசித்திருப்பானா? இன்று ஒரு அடி போட்டதும் ஓவென்று அலறுகிரானே ? அப்படியே கிடக்கட்டும் என்று தன் மனதை கல்லாக்கி கொண்டு தன பிள்ளைகளை கூட்டிக்கொண்டு நம்பிக்கையோடு வீட்டை விட்டு கிளம்புகிறாள் .
இந்த சம்பவங்கள் போல பல சம்பவங்கள் இன்று பெண்களுக்கு ஏற்பட காரணம் மது தான் நம் அரசாங்கம் அதை அங்கீகரித்து நாட்டில் குற்றங்களை அதிகமாக்கி கொண்டு இருக்கிறது இதை தனி மனிதர்கள் என்று சிந்தித்து செயல்படுவார்களோ அன்றுதான் பெண்ணுக்கு எதிரான வன்முறை குறையும் .
இன்று பாலியல் கொடுமைகள் அதிகரிக்க காரணம் கூட பொறுப்பற்ற பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளால் தான் அவர்களின் வளர்ப்பு சூழல் சரியில்லாத போது அவன் எப்படி சமுகத்தில் சிறந்த ஒரு குடிமகனாக வளர முடியும் .
இன்று கருவறை முதல் கல்லறை வரை பெண் கருகொலை ,சிசுகொலை , வரதட்சினை கொலை, ஊட்டச்சத்து குறைபாடால் இறப்பு , அடி உதை , சித்தரவதை என குடும்ப வன்முறை ,சாதி மத கலவரங்களால் கொடூர தாக்குதல் , உழைப்பு சுரண்டலால் மன உளைச்சல் ,பணியாற்றும் இடங்களில் பாதுகாப்பின்மை, பெண் குழந்தை தொழிலாளர்களின் ஒடுக்குமுறை, என்று பெண்களின் மரணம் வரையறையின்றி தொடங்கி சமூகம் அரசு , காவல்துறை , கல்வித்துறை , மடங்கள் , என்று அன்றாடம் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது . இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாளாக நவம்பர் 25 ஆம் நாள் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு நாள் என்று நினைவு கூறபடுகிறது .
இந்த ஒரு நாள் நினைவு கூர்வதால் மட்டும் பெண்கள் வன்முறையில் இருந்து காக்க படுவார்களா என்றால் நிச்சயம் இல்லை .பெண்கள் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு எதிராக அவர்களே ஆயுதமாய் எழுந்து நிற்கவேண்டும் . கொட்டுகிறார்கள் என்று குனிந்து கொண்டே இருந்தால் கொட்டிக் கொண்டே தான் இருப்பார்கள் .திரும்பி கொட்டி பாருங்கள் அப்போது யார் கொட்ட வருகிறார்கள் என்று பாப்போம் .
பெண்ணின் வாழ்க்கை வன்முறையின் அடிதலமாய் மாறிவிட்டது .இதை எதிர்த்து தமிழகமெங்கும் உள்ள பெண்கள் அமைப்பு இணைந்து குரல் கொடுக்க முன் வர வேண்டும் .பொது இடங்களில் ,வேலை செய்யும் இடங்களில் பெண்களை கேலி கிண்டல் செய்வதையும் பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்குவோரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் இதற்கென தனி நீதின்மன்றன்கள் உருவாக வேண்டும் .
வன்முறையை தூண்டும் படங்களை ,வசனங்களை பாடல்களை புத்தகங்களை, அழகு போட்டிகளை ,ஆடை அலங்காரங்களை ,அரசு உடனடியாக தடை செய்ய முன்வர வேண்டும். ஒட்டுமொத்தமாய் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் .வேலியே பயிரை மேய்வது போல காவல் துறையினரும் ,ஆசிரியர்களும் , பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை கண்டிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் .
பெண் குழந்தைகளுக்கு உறுப்புகள் பற்றிய விழிப்புணர்வை சொல்ல வேண்டும் குறைந்த பட்சம் மற்றவர்கள் தொட்டால் எதிர்க்கவும் கத்தி கூச்சலிடவும் விழிப்புணர்வை கற்று கொடுக்க வேண்டும் .
திருமணம் என்ற நான்கு சுவருக்குள் ஒரு ஆண் நடத்தும் சர்வாதிகாரத்தை எதிர்த்து அவனை தூக்கி எறியவும் துணிய வேண்டும் . வீழ்ந்து கிடக்கும் பெண்ணினம் நிமிர்ந்து எழுந்தால் இந்த மானிடம் தாங்காது என்பதை நிருபிக்கும் காலம் மிக அருகில் இருக்கிறது .
அன்பை கொடுபவர்களுக்கு அன்பை கொடுங்கள் அதிகாரம் செய்பவர்களை அதிகாரம் செய்யுங்கள் ,நீங்கள் தீ பொறியாக இருங்கள் உங்களை வைத்து விளக்கை பற்றவைத்து ஒளியும் கொடுக்கலாம் ஒரு காட்டையே அழிக்கும் வல்லமை மிக்கவர்களும் நீங்கள் தான் ஆகவே துணிந்து செயல்படுங்கள் . இனி வரும் பெண்கள் சமுதாயம் நிமிர்ந்து நிற்க தலைபடுவோம் .