"பேச்சு எங்கள் மூச்சு "என்று முழக்கமிடும் ஒரு சிலரை பார்க்கும் போதெல்லாம் இவர்களை பேசவிடாமல் சில நாட்கள் மௌன விரதத்தை கடை பிடிக்க வைத்தால் மூச்சை விட்டுவிடுவார்களோ ? என்ற எண்ணம் எனக்குள் வந்து போகும்.
வார்த்தைகள் தான் நமக்குள் எத்தனை பாதிப்புகளை உருவாக்குகிறது .பேசுவது தான் பிரதானமாக இருக்கிறது பேசாமல் இருபவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை .எப்போதும் பேசிக்கொண்டு இருப்பவர்களையும் யாரும் கண்டுகொள்வதில்லை அப்படியானால் எப்படித்தான் பேசுவது என்று கேட்கிறீர்கள் .
நம் பேச்சுக்களில் பெரும்பாலும் அர்த்தமற்றவைகள் நிறைந்து காணபடுகிறது ஒரு வரியில் சொல்ல வேண்டியதை பல பக்கங்களுக்கு சொல்லுகிறோம் சொன்னதையே திரும் திரும்ப சொல்லுகிறோம் நாம் பேசும் வார்த்தைகள் பெரும்பாலும் கடன் வாங்கப்பட்ட வார்த்தைகளாகவே இருக்கிறது நாம் உருவாக்கும் வார்த்தைகள் மிக குறைவானது தான்.
நாம் பேசியதை நாமே கேட்க நேர்ந்தால் நாம் நிச்சயம் வருத்தபடுவோம் அந்த அளவிற்கு அர்த்தமற்று பேசி இருப்போம்.
நம் பேச்சில் எதனை வீண் வார்த்தைகள் , எத்தனை உயிர்பற்ற சொற்கள் ,காரணமற்ற நகைச்சுவைகள் என்று நாமே தலைகுனியும்படியான வார்த்தைகள் அதிகமாக இருக்கும் .
அதற்க்கு காரணம் பேசினால் மட்டுமே நம்மை எல்லோரும் கவனிப்பார்கள் எல்லோரைவிடவும் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற வேட்கை நம்மை பயனற்ற வார்த்தைகளின் எண்ணிகையை கூட்ட தூண்டுகிறது அதனால் யாரிடம் பேசுகிறோம் எதற்காக பேசுகிறோம் , எந்த இடத்தில பேசுகிறோம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் பேசிகொண்டே இருக்கிறோம் .
நமக்கு தெரிந்ததை பேச வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்கிறது .எதிரே இருப்பவர்கள் அதை கேட்பார்களா ? அவர்களுக்கு அதை புரிந்துகொள்ளும் திறன் இருக்கிறதா ? நம் பேச்சில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதை பற்றி எல்லாம் நமக்கு கவலை இல்லை.நாம் பேச வேண்டும் அவ்வளவே .
நம் பேச்சில் எவ்வளவு உண்மை இருக்கு என்று நாம் உணர்ந்ததில்லை உதட்டில் இருந்து பேசுகிறோமா ,உள்ளத்தில் இருந்து பேசுகிறோமோ ,உண்மையை பேசுகிறோமா இல்லை ஊமையாய் பேசுகிறோமா என்றெல்லாம் ஒருபோதும் ஆராய்ந்ததில்லை .
வெறுமனே பேச வேண்டும் என்று பேசுவோம் நம்மை யாரும் தவறாக என்ன கூடாது என்று பேசுவோம் கோபித்துக்கொள்ள கூடாது என்று பேசுவோம் அல்லது நம் இருப்பை உணர்த்த சத்தமிட்டு பேசுவோம் ஆனால் பேச வேண்டும் என்று ஒரு போதும் பேசமாட்டோம் .
எதற்கு இந்த பேச்சுக்கள் இவை இல்லாமல் நாம் இருக்க முடியாதா ,இயங்க முடியாதா ? என்று என்றாவது யோசித்து இருக்கிறோமா ? இல்லை என்றால் உடனே யோசியுங்கள் பேச்சு என்பது கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு வழி அதை உபயோகிப்பதில் கவனம் கொள்வோம் .
தெரிந்த கதைதான் ராமாயணத்தில் சீதையை தொலைத்துவிட்டு தேடும் ராமனுக்கு எந்த வார்த்தையை சொன்னால் அவன் பதற்றம் குறையும் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று உணர்ந்த அனுமன் "கண்டேன் சீதையை " என்று சொல்லுவதாக கம்பன் சொல்லுகிறார் .இந்த வார்த்தை எத்தனை அர்த்தம் நிறைந்தது என்று நீங்களே உணருங்கள் .
ஒருவன் தன் உயிரினும் மேலான தன் துணைவியை காணாது தவித்து கொண்டு இருக்கிறான் அவளை தேடும் பொருட்டு சென்றவன் வருகிறான் அவன் சொல்லும் வார்த்தையில்தான் இவன் உயிர் அடங்கி இருக்கிறது என்கிற போது அவன் எப்படி சொல்லவேண்டும் " நான் சீதையை தேடிட்டு போனபோது ஒரு பாலம் வந்தது அந்த பாலத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் அதை கடந்து செல்ல இயலவில்லை ஆகையால் ஒரு மரதக்கை எடுத்து கொண்டு தண்ணீரை கடந்து அக்கறைக்கு சென்று அதன் பின் அந்த வனாந்தரத்தின் வழியாக சீதா தேவியை தேடி கொண்டு போனேன் அதன் பின் ஒரு மரத்தடியில் அவர்களை கண்டேன் " இவ்வாறு நீட்டி நெளித்து ஒரு விஷத்தை அவன் சொல்லியிருந்தால் ராமன் தன் உயிரை விட்டு இருப்பார் இல்லையெனில் அனுமனின் உயிரை எடுத்து இருப்பார் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றுதான் நடந்து இருக்கும் . இதை படிக்கும் போது நமக்கே கோபம் வரும் . இப்படிதான் நாமும் பல நேரங்களில் பேசி கொண்டு இருக்கிறோம் .
தேவையான வார்த்தைகளை விட தேவையற்ற வார்த்தைகள் அதிகமாகும் போது உறவுகளுக்குள் முறிவுகள் ஏற்படுகிறது . ஒரு கட்டாயத்திற்காக ,சில நிர்பந்தங்களுக்காக ,சில தேவைகளுக்காக மட்டுமே பிறர் பேச்சை கேட்பது போல பாவனை செய்வார்கள் அந்த தேவைகளும் ,கட்டாயமும் இல்லாத நேரத்தில் நீங்கள் பேசிய அர்த்தமற்றவைகளை உங்கள் முன் முகச்சுழிப்போடு கொட்டிச் செல்வார்கள் அதை திரும்ப பெறும்போது மட்டுமே அதன் கடின தன்மையை நீங்கள் .உணருவீர்கள் ஆகையால் அவசியம் ஏற்படும்போதும் கூட சிக்கனமாக செலவிடுங்கள் வார்த்தைகளை .
ஒரு சொல் ஒருவரை உயிர்பிக்கும் அதே போல ஒரு சொல் ஒருவரின் உயிரை பறிக்கும் .
உயிர்பிக்கும் சொல்லுக்கு நம் அனுமனின் பதில் சரியாக் இருக்கும் உயிர் பறிக்கும் சொல்லுக்கு நமக்கு தெரிந்த கதை ஓன்று சிலப்பதிகாரத்தில் கோவலன் தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான். கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டி அரசனிடம் செய்தியை சொல்லுகிறார்கள் அப்போது " அவனை கொண்டு வா என்று சொல்வதற்கு பதிலாக "கொன்று வா" என்று வார்த்தை பிறழ்ந்து சொன்னதில் கோவலன் கொலை செய்ய படுகிறான் காவலர்களால் .
நாம் சொல்லும் ஒரு சொல்லில் அடுத்தவர்கள் வாழ்வு அடங்கி இருக்கிற.து அதனால்தான் வள்ளுவர் கூட
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு .
என்ற குறள் மூலம் ஒருவருக்கு தீயினால் ஏற்படும் புண் கூட ஆறிவிடும் ஆனால் ஒருவரை நம் நாவினால் உருவாகும் வார்த்தைகளால் ஏற்படுத்தும் புண் ஆறாமல் அவர்கள் மனதில் வடுவாக இருந்து வலியை கொடுக்கும் என்று கூறுகிறார் .
(ஓசை தொடரும் )