Quantcast
Channel: பெண் என்னும் புதுமை
Viewing all 164 articles
Browse latest View live

சமாதியை தேடி

$
0
0

சாயம் கலந்த நீரும்
ரசாயனம் குடித்த மண்ணும்
இடம் மாறி நிற்கும் வானமும்
இடைவிடாது அழுது தீர்த்துவிட்டதால்
இனி வடிய (கண் ) நீரற்று
காய்ந்து கிடக்கிறது நிலம்

எங்கும் பச்சை கம்பளம் விரித்து
திசையெங்கும் கரம் நீட்டி நிற்கும்
மரங்களைச் சுற்றி ஓயாது சுழலும்
நீரலைகலும்

பூக்களை தூவுவது போல
மழை தூவும் வானமும்
கைகோர்த்து கதை பேசிய
காலம் கனவாகி போக

சாய்ந்து கொள்ள மரமில்லா
சருகு தொலைத்த அந்த
பாலையில்

நா நனைக்க துளி நீரில்லா
சாபம் வாங்கி வந்த
என்னை சமாதானம் செய்ய
வக்கற்று எனக்கான
சமாதியை தேடி அலைகிறேன்


சாபமான வரங்கள்

$
0
0


வெயில் சரியும் நேரம்
காற்று கூட தன் வேகம் குறைத்துச் செல்கிறது
காய்ந்த சருகுகள்
மண்ணில் சரணடையும்
அந்தச் சமாதி பொழுதில்
சலசலக்கும் மனதின்
சப்தங்களை அடக்க முயன்று
தோற்று நிற்கிறேன்


சற்றுமுன் நீ என்னை -
சாட்டையால் தாக்கியது போன்ற
வலி மிகுந்த
வார்த்தைகளால்
கீறிச் சென்றுவிட்டாய்
உள்ளத்தின் மெல்லிய சுவர்கள்
குருதி ஒழுக
கிழிந்து தொங்குகிறது

இனி எப்போதும் ஒட்டிவிடக்கூடிய
சாத்தியகூறுகள் இல்லாத
அதன் கிழிந்த முனைகளில்
தொக்கி நிற்கிறது
நம் முந்தைய நாட்களின்
இன்ப நினைவுகள்


பிரித்து எடுக்க முடியாமல்
கலந்து நிற்கிறோம்
தேநீரும் பாலுமாக
பின்னொரு பொழுதில்


காலம் அன்னமாக நின்று
பிரித்து பார்க்கும் என்று
கனவில் கூட நினைத்து
பார்த்திராத அந்த பொழுதுகள்
ஆசிர்வதிக்கப்பட்டவை

எழுத்து கேணி

$
0
0
நண்பகல்  வேளை 
என் உடலின் நீரை 
உறிஞ்சும் சூர்யனுக்கு 
நிகராக என் எழுத்துகளை 
உறிஞ்சி சென்று இருக்கிறாய் 

எழுத அமர்ந்த பின்புதான் 
என் எழுத்து கேணி 
வற்றிக் கிடப்பதை கண்டேன் 

எதிர்பாராமல் என் மீது 
விழுந்து என் முகத்தில் 
முகம் கவிழ்த்த போது 
உறிஞ்சிருக்க கூடும்  

இறைக்க இறைக்க ஊராத 
அக்கேனியின் வறண்ட 
பகுதிகளில் கிளருகிறேன் 
எதிர்பாராத வேளையில் 
பீரிட்டு வெளிவருகிறது 
குருதி நிறத்தில் ஒரு எழுத்து 

உள்ளத்தின் ஓசை 29( அர்த்தமற்ற உறவுகள் )

$
0
0

உறவுகள் என்றதும் தாத்தா , பாட்டி,அப்பா,அம்மா,அண்ணன் ,அக்கா, தம்பி ,தங்கை ,மாமா ,அத்தை ,சித்தப்பா ,சித்தி,பெரியம்மா ,பெரியப்பா இப்படி பல்வேறு உறவுகள் கண்முன் வந்து போகிறார்கள் அவர்களோடு ஒன்றாக ஒரே குடும்பமாக வசித்த அந்த ஆசிர்வதிக்கப்பட்ட நாட்கள் ஒரு சொர்க்கத்தை போல காட்சியாக விரிகிறது மனக் கண் முன் .


அந்த நாட்கள் அற்புதமானவை பாட்டி தலைவாரி பூச்சூட்டி விடுவாள் பெரியம்மா பலகாரம் சுட்டு தருவாள் ,சித்தப்பா பூங்காவிற்கு அழைத்து சென்று எங்களோடு விளையடுவார், கதையும் பாட்டும் எப்போதும் காது நிறைய இருந்துகொண்டே இருக்கும் ,தடுக்கி விழுந்தால் தாங்கி கொள்ள சுற்றிலும் ஆட்கள் இருந்தார்கள் .


விசேச நாட்களில் விழாக்கோலம் பூண்ட கோவிலை போல அழகாக இருக்கும் வீடு குழந்தைகள் அனைவரும் குதூகலமாய் ஆடி பாடி மகிழ்ந்த அந்த நாட்கள் இப்போது கனவாகி விட்டது .இன்றைய தலைமுறைக்கு அந்த உறவுகளின் பெயர்களும் உருவங்களும் தெரியவில்லை என்ற விஷயம் நெஞ்சை கொள்ளும் விசமாக இருக்கிறது .


எனக்கு தெரிந்த தோழி ஒருத்தியின் பாட்டி இறந்ததற்காக அவர்கள் வீட்டிற்கு சென்று இருந்தேன் இறுதி சடங்கை செய்ய பேரப் பிள்ளைகளை வர சொன்னார்கள் அப்போது தான் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவர்கள் உறவினர்கள் என்பதே அவர்களுக்கு அப்போதுதான் தெரிகிறதாம் .காரணம் அவருடைய மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வெவ்வேறு இடத்தில வேலை பார்கிறார்கள் திருமணதிற்கு கூட இங்கு வரவில்லை அங்கேயே பெண் பார்த்து திருமணம் முடித்து கொண்டார்கள் .இத்தனை வருடம் கழித்து தாயின் உடல்நிலை மோசமாகிவிட்டதால் பார்க்க வந்தவர்கள் கையோடு இறுதிச் சடங்கை முடித்து விட்டு போக ஆயத்த மாகிவிட்டார்கள் .இவர்களை ஒரு வகையில் பாராட்டலாம் ஏனென்றால் பெற்றோர்களின் இறுதி சடங்கை வீடியோ எடுத்து அனுபுங்க பார்த்துகொள்கிறோம் என்று பணத்தை மட்டும் அனுப்பும் நல்லவர்களும் இந்நாட்டில் இருக்கிறார்கள் .


இப்படி பட்டவர்கள் உருவாக காரணம் அவர்களின் பெற்றோர்கள் தான் .குழந்தைகள் நலனையும் குடும்பம் என்கிற அமைப்பையும் உறவின் அருமையையும் சொல்லி கொடுக்காமல் தங்களுடைய சுய நலத்திற்காக தான் மட்டும் நல்லா இருக்கனும் என்று கூட்டு குடும்பங்களை பிரிந்து தனியாக வந்து சுயநலமாக வாழ்கிறார்கள். அந்த சுயநலத்தை குழந்தைகளுக்கும் கற்றுத் தருகிறார்கள் .அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் விலைவாசி உயர்வு, இருவர் சம்பாத்தியம் , குழந்தைகள் பள்ளிக் கட்டணம் என்று பல காரணம் இருந்தாலும் அனைத்தையும் தவிர்த்து கூட்டாக இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து பாசங்களையும் ,பணத்தையும் பரிமாறிக்கொண்டு வாழ்ந்துகொண்டு இருபவர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும் .


தனித்து வாழும் மனிதர்கள் பணத்தின் பின்னாடி ஓடியவர்கள் நிலை கடைசியில் எப்படி இருக்கும் என்பதை கீழ்வரும் கதை நமக்கு அறிவுறுத்தும் .


" ஒரு வயதான் தாத்தா தனியாக ஒரு வீட்டில் வசிக்கிறார் அன்று நேரமே எழுந்து கதவை திறந்து ரோட்டுக்கும் ,வீட்டுக்குமாக நடந்து கொண்டு யாரையோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறார் .காரணம் அவருக்கு அன்று 90 வது பிறந்த நாள். சில வருடங்களுக்கு முன்புதான் மனைவியை பிரிந்தார் .மகன்களும் பேரப் பிள்ளைகளும் வெளி நாட்டில் இருகிறார்கள எப்படியும் தன் பிறந்த நாளுக்கு வந்து பார்ப்பார்கள் என்று உள்ளுணர்வு சதா சொல்லிகொண்டே இருந்ததால் அன்று வங்கியில் போய் பணத்தை எடுத்து வந்து அவர்கள் கொடுக்கும் பரிசு பொருளுக்கு பதிலாக அவர்களுக்கு பிடித்ததை கடைகடையாக போய் வாங்கி வந்திருந்தார் .


மதியம் வந்தது ,மாலை வந்தது ,இரவும் வந்தது அவர்கள் மட்டும் வரவில்லை செய்து வைய்த்த சமையல் அவர்கள் வந்தபின் சாப்பிடலாம் என்று காத்திருந்ததில் சூடாறி கிடந்தது .


அவர் ஒரு காகித்தை எடுத்து எழுதினார் "என் அன்புக் குழந்தைகளே நீங்கள் எத்தனை மணிக்கு வந்தாலும் கதவை தட்ட வேண்டாம் கதவு திறந்தே இருக்கிறது நான் உங்களுக்காக உள்ளே காத்து இருக்கிறேன் வாருங்கள் " என்று எழுதி கதவில் ஒட்டி வைத்துவிட்டு உள்ளே சென்று அமர்ந்துகொண்டார் .அவர்கள் வந்தபாடில்லை இப்படிதான் நாம் வாழ்கையை விட்டு வெகு தூரம் சென்று நின்றுகொண்டு அதை வேடிக்கை பார்ப்பதும் அதன் அருகாமைக்கு ஏங்குவதுமாக நம்மைத் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் .

"வாழ்க்கை என்பது நாணயம் போல நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் .ஆனால் ஒருமுறைதான் " என்பதை நினைவில் வைத்துகொண்டு உங்கள் வாழ்கையை வாழுங்கள் .




(ஓசை தொடரும் )

புலம் பெயரும் இலைகள்

$
0
0

***
இலை ஓன்று
கிளையில் இருந்து
பெயர்ந்து
விழுகிறது
அதன் ஓலம் கேட்டு
திரும்புகிறேன்
மிகுந்த வலியோடு
மண்ணில் புலம் பெயர்ந்து கிடக்கிறது


இனி ஒரு போதும்
கிளைக்கு திரும்ப முடியா
மரண வேதனையோடு
மட்கி போக துணிகிறது
மண்ணோடு .

யாம யாகம்

$
0
0
மெல்ல நனைக்கும் 
ஒரு துளிக்காக 
தவம் இருக்கும் 
அந்த யாம வேளையில் 

என்னையே நெருப்பாக்கி 
யாகம் வளர்க்கிறேன் 
அப்படியேனும் 
தவம் கொண்டு வந்து 
சேர்க்கட்டும் 
வரமாய் ஒரு துளியை 

இன்னும் ஈரம் படாத 
பிளந்த மண்ணின் கோரம் 
பாலையை முன்னிறுத்தி 
பயம் கொள்ள செய்கிறது 

மீண்டும் ஒரு யுத்தம் 
தாங்க வலுவிழந்து 
இருக்கும் இந்த  மண்ணை 

நனைக்க ரத்தம் வேண்டாம் 
கண்ணீர் வேண்டாம் 
சாரல் போதும் 

விருது வென்ற "மௌனத்தின் இரைச்சல் "

$
0
0

கவிதை மீது எனக்கு  தீராத தாகம். என் வாழ்வின் வழி நெடுகிலும்
இளைப்பாறும் மரமாக இருக்கிறது .என் பால்யத்தின் பச்சை வாசத்தை கவிதையில் மட்டுமே சுவாசிக்க முடிகிறது

என் அம்மாவின் பாசத்தை
என் சகோதரியின் நேசத்தை
என் காதலின் ஸ்பரிசத்தை
என் நட்பின் சுவாசத்தை
அவமானத்தின் வலியை
குரோதத்தின் நெடியை
துரோகத்தின் பாரத்தை
சமூகத்தின் மாற்றத்தை
தாய்மொழியின் பற்றுதலை
புலம்பெயர்தலின் தவிப்பை


இப்படி எத்தனையோ
இரைச்சல்களை இறக்கி வைக்க
எனக்கு மௌனம் மட்டுமே தாங்கியாய் இருந்தது

அந்த மௌனத்தை மொழிபெயர்த்து கவிதையாய் எழுதியதோடு
நின்றுவிடாமல் ஒரு மாலையாய் கோர்த்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்க பிரியபட்டதன் காரணம் நான் நடந்த பாதையில் நான் பார்த்த பசுமையையும் ,குளிர்ந்த காற்றையும் ,முழு நிலவையும் , பாலையின் வெம்மையும் மற்றவர்களும் உணர்ந்து இருப்பார்களோ ? அப்படி உணர்ந்திருப்பின் என் எழுத்து அவர்களை ஆசுவாசபடுதட்டும் என்ற நம்பிக்கையில் தான் .


அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என் முதல் கவிதை நூல்
 "மௌனத்தின் இரைச்சல் " 2012 ம் ஆண்டு வெளியிடப்பட்டது அந்த நூலுக்கு 2012 ம் அந்த ஆண்டின் சிறந்த நூலுக்கான " சக்தி விருதை " தருவதற்காக தேர்வு செய்த திருப்பூர் அரிமா சங்கத்திற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .


ஒரு நூலை எழுதியவர் யார் என்று பார்க்காமல் அந்த நூலில் எழுதப்பட்ட விசயங்களை பார்த்து மட்டும் விருது வழங்க முன் வரும் அரிமா சங்கத் ேர்வு குழுவிற்கு என் பாராட்டுகள்

வரும் ஜூன் 15 2013மாலை திருப்பூரில் விருது வழங்கும் விழா நடக்க இருக்கிறது அனைவரும் கலந்துகொண்டு விழாவையும் என்னையும் என் நூலையும் சிறப்பிக்க அழைக்கிறேன் .

மேலும் என் நூலுக்கு அணிந்துரை வழங்க

 

பிரபலமான எழுத்தாளர்கள் சிலரை நண்பர்கள் சொன்னபோது ஞானி ஐயா அவர்களை பற்றி கேள்விப்பட்டேன் அவருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது நாம் கவிதையை சொல்லி அவர் கேட்டு அதன் பின் நமக்கு அணிந்துரை வழங்குவார் .அதே சமயம் கவிதை சரியில்லையெனின் அதையும் உடனே சொல்லிவிடுவார் வருதப்படக்கூடாது என்று தோழி கூறவும், என் கவிதைக்கான அணிந்துரைக்கு சரியான நபர் அவர்தான் என்று நினைத்தேன் .

காரணம் இந்த இயந்திர வாழ்வில் எப்போதும் வேலையாக இருக்கும் நபர்களிடம் நம் கவிதையை கொடுத்தால் அவர்கள் முழுதாய் பார்ப்பார்களா ? அப்படி படித்தாலும் அதன் அர்த்தங்களை உணர்ந்து சரி தவறு என்று சொல்லுவார்கள் ? இல்லை என்றால் சிறப்பாக இருக்கிறது என்று பொதுவாக சொல்லிவிடுவார்களா? என்ற ஐயம் எனக்குள் இருந்ததால் ஞானி அவர்களையே நேரில் சந்தித்து அவரிடம் என் கவிதையை அருகில் அமர்ந்து வாசித்தேன் கவிதையை கேட்டவுடன் கவிதை பற்றிய விமர்சனத்தை முன் வைத்தார் "சுவையாக இருக்கிறது ,இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்து இருக்கலாம் ,உப்பு குறைவாக இருக்கு , போன்ற பல விமர்சனங்களோடு, சில கவிதைகள் முழு வளர்சியடைவில்லை என்றும் ,சிலவற்றை சிறப்பு என்றும் சிறப்பாக அணிந்துரை வழங்கி முதல் விருதை கொடுத்த மதிப்பிற்குரிய திரு.கோவை ஞானி அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு கோவை ஞானி அவர்கள் வழங்கிய என் நூலுக்கான அணிந்துரை
மௌனத்தின் இரைச்சல் என்ற தன் கவிதைத் தொகுப்பை என் அணிந்துரைக்காக மு. சரளாதேவி என் கையில் தந்தபோது வழக்கமான ஒரு தொகுப்பாக இருந்து விடுமோ என்ற தயக்கத்துடன் தான் வாங்கினேன். உடனடியாக அவரிடம் சில விசாரணைகள் உங்கள் படிப்பு என்ன ? என்ன தொழில் செய்கிறீர்கள்? இப்படி மேலும் சில கேள்விகள் சரளா எந்த தயக்கமும் இல்லாமல் பதில் தந்தார் . கணவரும் உடன் வந்திருந்தார் உளவியல் கற்றேன் என்றார் தமிழில் முனைவர் தகுதி ஆய்வு செய்வதாக சொன்னார். எனக்கு வியப்பாக இருந்தது. அவரிடம் மரியாதையும் ஏற்பட்டது. நான் தேடிய ஒரு தமிழ் மாணவர்தான் இவர் என்றும் மகிழ்ச்சியடைந்தேன்.

நான்காண்டுகளாக கவிதை எழுதிவருவதாக சொன்னார் உடனடியாக என் கேள்வி கவிதை எழுதாமல் உங்களால் இருக்க முடியாதா ?என்று கேட்டேன் .வேண்டும் என்றுதான் கேட்டேன் .சற்று நிறுத்தி ஒரு கணம் யோசித்து பதில் கூறினார் என்னால் கவிதை எழுதாமல் இருக்க முடியவில்லை என்றார். ஒருவர் கவிதை எழுதுவதற்கான தகுதி இதுதான் என்பது என் கருத்து அதன் பிறகு எதற்கு இப்படி ஒரு தலைப்பு என்று கேட்டு வைத்தேன் .சரியாகத்தான் பதில் சொன்னார் சில கசப்பான அனுபவங்களின் போ து உடனடியாக பதில் தெரிந்தும் அதை வெளிப்படுத்த இயலாமல் ,அப்படியே வெளியில் சொல்லிவிட முடியாமல் தவிக்கிறேன் .மௌனத்தில் எனக்குள் சொற்கள் இறைச்சலிடுகின்றன என்றார். பின்னர்தான் தன்னை நிதானப்படுதிகொண்டு பக்குவமாக பேசுகிறேன் என்கிறார். அலுவலகத்தில் இப்படி பேசுவது சரிதான் குடும்பதிலுமா என்றேன்.குடும்பத்திலும் இப்படிதான் என்கிறார்.

இடையிடையே தன் கவிதைகளை அவர் படிக்க நான் கேட்டுக்கொண்டேன் .இப்படி சில கேள்விகளோடு உரையாடலும் தொடருகிறது. இவர் கவிதைகள் எனக்குள் நம்பிக்கையைத் தருகின்றன. இவர் கவிஞர்தான் என்பதை நான் ஒப்புகொள்கிறேன் . கவிஞர் சரளாவை நான் மதிக்கிறேன்,பாராட்டுகிறேன்,கவிஞர் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பொதுச்சொல் என்பதால் கவிஞர் என்றே அழைக்கிறேன்.

கவிஞர் சரளா அவர்களின் கவிதைகளுக்குள் இனி செல்லலாம் .அகராதி பொருளில் கவிதைகளுக்குள் வரும் சொற்கள் தம்மைக் கட்டுபடுத்திக் கொள்வதில்லை .கவிதைக்குள் வரும் சொற்களுக்கு சுதந்திரம் அதிகம். சொற்கள் தாவும், பறக்கும், குதிக்கும்,கொந்தளிக்கும்,குமுறும்,மௌனிக்கும் மௌனத்தின் கனலும் கரையும், உருகும், ஓங்காரமிடும் இப்படியெல்லாம் சொற்களின் பாய்ச்சல் தெரிந்த இவர் நல்ல கவிஞர் இவர் கவிதைகள் பலவும் இத்தன்மையோடு இயங்குகின்றன.

காதல் கவிதை எழுதாமல் இருப்பது எந்த தமிழ் கவிஞனுக்கும் இயல்பில்லை. இவரும் காதல் கவிதைகள் பல எழுதியிருக்கிறார். தமிழின் அழகுக்கு புதுமை சேர்ப்பவை இவரது காதல் கவிதைகள். அகத்திணை இலக்கணம் என்ற வரையறை கடந்தும் இவரது கவிதைகள் சில இயங்குகின்றன .காதல் கவிதையில் விரசம் இல்லை என்பதையும் சிறப்பாக குறிப்பிட வேண்டும். பெண் கவிஞர் என்பதால் இவரது கவிதைகள் பெண்ணிய கவிதைகள என்றும் சொல்வதற்கில்லை. பெண்ணிய கவிதை எழுதும் சூழலில் இவர் குடும்ப சூழல் இல்லை இவர் கணவர் அன்பானர் பெண்ணை மதிக்க தெரிந்தவர் பெண் உரிமையை ஏற்பவர் இவர்களுக்கு இடையே ஊடலுக்கும் இடமுண்டு என்பதை ஒரு கவிதையில் சொல்லுகிறார் .

" தாயின் மடியில் தவழ்ந்த காலம் இனிது
நிலாவை துணைக்கு அழைத்து சுற்றி திரிந்த காலம்
குளிரும் சுவை அறிந்த காலம்
பருவ மாற்றத்தில் குளிரை முழுதும்
சுவைக்கும் முன் தொண்டையை
இருக்க பற்றியது இரு கரம்
அதன் பின் என் பயணம் பாலை நிலத்தில்
கோர முட்களுக்கு இடையே தொடர்ந்த வேளையில்
ஒரு துளி மழையை கண்டு உயிர்பெருகிறேன் "

என்று அந்த ஒரு துளியை குழந்தை என கூறி தன்னை வெளிபடுத்துகிறார் ..

தன் கால வரலாற்றோடும் சமூகத்தோடும் எந்த ஒரு மனிதனும் இணைந்திருப்பதோடு ,அதைப்பற்றிய ஆழமான உணர்வும் ஒரு நல்ல கவிஞனுக்கு இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் .அந்த எதிர்பார்ப்பை கவிஞர் பூர்ததிசெய்கிறார். நம் சமூகத்தில் இன்னும் சாதி கொடுமைகள் குறைந்தபாடில்லை ,படித்தவர்கள், பனி செய்யும் அலுவலகத்தில் சாதி உரசல்கள் இருப்பது கண்டு கவிஞர் சரளா சாடுகிறார் .கோபுரங்கள் சரிவதை பண்பாட்டின் நிலை சரிவதாக நம் மூத்தோரின் அடையாளம் சரிவதாக வேதனை படுகிறார்.

நெடுங்கால மரபுகள் நம் சமூகத்தை இன்னும் நீடிகின்றன அதில் சில சிந்திக்க வைக்கின்றன சில சிறைப்படுத்துகின்றன. இந்த வட்டத்தை நம்மால் தாண்டவும் இயலவில்லை அதில் உடைத்துகொள்ளவும் இயலவில்லை குறிப்பாக பெண்கள் மரபு கட்டுபாட்டில் சிதைவதாக கவிஞர் கூறுவது உற்று நோக்க கூடிய விஷயம்.


மேலும் அந்நியரிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை இன்னும் நாம் சாதி மதம் ,இனம் என்ற சிறைக்குள் வைத்து பூட்டி இருக்கிறோம் அவற்றை வெளியேற்றி முழுதாய் நாம் உணரும் வரை ஆகஸ்ட் 15 வெறும் ஆடம்பர விழா மட்டுமே என்று கூறும் இவரின் உணர்வு சிறப்பானது .

கவிஞர் சரளா நல்ல தமிழ் கவிஞர் .தமிழை நேசிப்பவர்.இவர் தொகுப்பில் உணர்சிகரமான கடைசி கவிதையில் இவர் என்னவெல்லாம் பேசுகிறார். வருந்துகிறார்,தமிழ் மொழியை தாயாக முன்னிலை படுத்தி பேசுகிறார் " நீ அருகில் இருக்கும் போது நான் அலட்சியமாய் இருந்துவிட்டேன் தொலைவில் சென்றபோது நீ குறிஞ்சியாய் மணக்கிறாய்.என்கிறார் உண்மைதானே தமிழை விட்டு நாம் நெடுந்தொலைவு நகர்ந்துவிட்டோம் . "உடைமையை தொலைத்தோம் உயிரையும் தொலைத்தோம் ,முகவரியையும் தொலைத்தோம் " "இயந்திரங்களோடு நாம் இணைந்தோம் இணையங்களில் வாழ்கிறோம் இறக்கமிள்ளதவர்களோடு உறவு கொண்டு நடைபிணமாய் வாழ்கிறோம்" என்கிறார் நமக்குள்ளிருந்து பேசுகிறார் நாம் பேச வேண்டியதை பேசுகிறார் .ஒரு தமிழ் கவிஞர் வேறு எப்படி பேச முடியும் இதற்காகவும் கவிஞரை வாழ்த்துகிறோம் .

நினைவுச் சருகுகள்

$
0
0

தனித்த நடை பயணத்தில் 
சற்றென்று எங்கிருந்தோ வந்து 
கைகோர்த்து நடக்கிறாய்

நடுச்சாமத்தில் கண்விழிக்கும் போது 
கண் எதிரே சிம்மாசனம் போட்டு 
அமர்ந்து இருகிறாய் 

காற்று வந்து தலை கோதும் போது 
உன் கரங்களால் வருடும் 
ஸ்பரிசத்தை உணருகிறேன் 

மெல்ல நனைக்கும் 
நீர்த்துளிகள் 
மேனி தொடுகையில் 
வெட்கத்தில் சிவந்து போகிறேன் 

பார்க்கும் இடமெல்லாம் 
நாம் பயணித்த சுவடுகளை 
மாட்டிவைத்திருக்கும் போது 

நீயில்லா ஒரு நகர்வை 
நினைத்து பார்ப்பது 
அரிதாகிப்போனது ..





சங்கரனை அழைக்கும் தருணம்

$
0
0

கண் முன் நடக்கும் 
கலவரங்களை 
கண்டும் காணாதும் 
இருந்தால் மட்டுமே 
உயிர்வாழ்தல் உறுதி செய்யப்படும் 
என்ற உன்னத கோட்பாடுகளையும் 

சமூகத்தை நினைத்து 
சந்திக்கு வந்துவிடக்கூடாது என்ற 
உறவுகளின் வார்த்தைகளுக்கு 
மதிப்பளித்தும் 

ஒரு முட்டையென 
அடைகாத்து வைத்த உயிர் 
சற்றென்று வந்த 
(மார்)அடைப்பால் 
சருக்கி விழுந்து 
உடைந்து போனது 

இனி வாழ்தல் 
சாத்தியமற்ற இக்கணத்தில் 
உயிரின் கடைசி சொட்டு 
விழும் தருணத்தில் 

மெல்ல கசிகிறது 
கண் முன் நிழல் ஆடும் 
சமூகத்தின் அழுக்குகளை 
சற்றேனும் கழுவி இருக்கலாம் என்று 

அச்சம் தரும் நிழல்கள்

$
0
0
நெடுங்கால மரபின் வேர்கள் 
செல்லரித்து சிதைந்து கிடக்கிறது 
ஆனாலும் அதை பிடித்துகொண்டு 
இன்னும் கொஞ்சம் நாள் 
வாழ்ந்துவிடலாம் என்ற 
எண்ணத்தில் 
மண்விழுந்து விட்டது 

மழை விழுந்தாலாவது 
மறுபடியும் துளிர்ப்பது 
சாத்தியமாகும் ஆனால் 
காணும் திசை எங்கும் 
பாலையின் வெம்மை மட்டுமே 
உணர முடிகிறது 

இலை போர்த்தாத 
நிர்வாண மரங்களும் 
அதன் நிழல் தரும் 
அச்ச ரூபங்களும் 
மனதின் கொஞ்ச இடங்களிலும் 
நஞ்சை விதைத்து செல்லுகிறது 

எப்போது உயிர் பறவை 
கூட்டை விட்டு வெளியேறும் 
கொத்தித் தின்னலாம் என்று 
காவல் காத்து கிடக்கும் 
கழுகுகளின் கூர்மையான 
பார்வைக்கு நடுவில் 
சிறை வைக்கப்பட்டு இருக்கிறேன் 

சுற்றிலும் ஓடும் ரத்த ஆறும் 
மலைபோல் குவிந்து கிடக்கும் 
மனித கூடுகளும் 
உயிர் வாழும் ஆசையை 
மெல்ல குறைக்கிறது

எங்கேனும் ஒரு பச்சையை பார்க்க முடியாதா ?
என்ற நப்பாசையோடு அலைந்து திரிகிறேன் 
எங்கேனும் ஒரு துளி என் உள்ளம் நனைக்காதா ?
என்று ஏங்கித்  தவிக்கிறேன் 

அழைத்தலும் தவித்தலும் 
உணர்த்தி செல்லுகிறது 
வாழ்தலை விட சாதல் மேலென 
ஆனாலும் நம்பிக்கை கொண்டு 
நிற்கிறேன் 

பாலை மீண்டும் குறிஞ்சியாகும் 
தருணத்தை நோக்கி ...




பள்ளத்தில் தள்ளும் அலைகள்

$
0
0
பெரும் சீற்றத்தோடு 
மேலெழுந்த அலை போல் 
எனக்குள் மகிழ்ச்சியில் 
அலைகள் ஆர்பரித்த  தருணங்கள் 
அளவுகளில் காட்டிவிடமுடியாத 
தருணங்கள் 

அலைகளின் உயரமும் 
அப்படியே நின்று விடுவதில்லை 
அடுத்த கணமே 
உள்ளிழுத்து கொள்ளுகிறது 
நத்தையின் கூட்டைப்  போல 
மகிழ்ச்சி சற்றென்று 
தடயம் இல்லாமல் 
அளிக்கப்பட்டு 

அதற்க்கு நிகரான 
துக்கத்தின் பள்ளங்களை 
பரிசளித்து விடுகிறது 
உயரத்தில் இருந்து 
சறுக்கி விழுவது 
சற்றென்று நிகழ்ந்துவிடுகிறது 

துக்கத்தின் பள்ளத்தாக்குகளில் 
இருந்து மேலெலுவது 
அவ்வளவு சுலபத்தில் 
நிகழுவதில்லை 
இருவேறு பாதைகளை 
ஒரே நொடியில் 
பயணிக்கும் மனநிலையில் நான் 
மீண்டும் மேலெழும் தருனத்திர்கான 
காத்திருப்போடு கரைந்துகொண்டிருகிறேன் 

சக்தி விருதும் சமகால எழுத்தாளர்களும்

$
0
0

15.05.2013 சனிகிழமை மத்திய அரிமா சங்கம் ,திருப்பூர் இளம் எழுத்தாளர்களுக்கும் , கவிஞர்களுக்கும் ,கலைஞர்களுக்கும் விருது வழங்கி அவர்களின் பணியை தொடர் ஊக்குவிக்கும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தியது.

நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார் அரிமா ரவி  மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருது  வாங்கிய கலைஞர்களையும் ,கவிஞர்களையும் சிறப்பான கேள்விகளை கேட்டு அவர்களின் சுவாரசியமான பதிலை பதிவு செய்தார் திரு. சுப்ரபாரதிமணியன் அடுத்ததாக தன்னுடைய சினிமா பயண அனுபவத்தை உருக்கமாக பேசி கேட்போரின் நெஞ்சத்தில் ஈரத்தை விதைத்து சென்றார் அஜயன் பாலா அடுத்தடுத்து தங்களுக்கு கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக பேசினார்கள் அனைத்து கலைஞர்களும். அவர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன் .


மேலும் இது போன்ற நிகழ்ச்சியில் ஒரு மேடை கிடைக்காத நாமும் பேசிவிடமாட்டோமா ? நமக்கும் பாராட்டு கிடைத்துவிடாதா ? என்று ஏங்கும் பலருக்கு வாய்ப்பை தருகிறது அரிமா சங்கம் ,திருப்பூர்.  ஆகவே இளைய எழுத்தாளர்களே , குறும்பட கலைஞர்களே உங்களை ஊக்குவிப்பவர்களை தேடி அவர்களை நாடி உங்களின் லட்சிய கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் .

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சியை அலங்கரித்த எங்களின் கோவை பதிவர்கள் சங்க நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் குறிப்பாக நண்பர் கலாகுமரனும் ,கோவை ஆவியும் நிகழ்ச்சி முடியும் வரை உடன் இருந்தர்கள் அவர்களுக்கு கூடுதல் நன்றி



விருது பெற்றவர்கள்

சிறந்த திரைப்பட நூல் விருது

* அஜயன் பாலா – திரைப்படக்கலைஞர்

( ‘உலக சினிமா வரலாறு’)

* சக்தி விருது 2013

ஈழவாணி ( சென்னை),

கோவை மு .சரளா (கோவை)

பவள சங்கரி (ஈரோடு), நீலவேணி ராதாகிருஷ்ணன்(அவிநாசி)

அமுதினி ஏ,வி (திருப்பூர்)

* குறும்பட விருது 2013

வினாயக மூர்த்தி, இரா.செல்வி, வியாகுல மேரி,முத்து

தி.சிவகுமார்,ஜி.திருநாவுக்கரசு,நவயுகன் ஏ.ஏ,எஸ்.சுபாஷ்




அஜயன் பாலா ,சுப்ரபாரதிமணியன்  விருது  வழங்குகிறார்கள் கோவை மு.சரளா பெற்றுக்கொண்டார் 



                                                             இரா.செல்வி


                                                   நீலவேணி ராதாகிருஷ்ணன்
                                                         
                                                              அமுதினி ஏ,வி

கடல் சேரும் அலைகள்

$
0
0


மறுக்கப்படும் நொடியில்

மரணித்து போகும் செல்கள்

அசைவற்ற மயானத்தின்

அமைதியை வெளிபடுத்துகிறது



இருப்பின் திசைஎங்கும்

நீளும் அர்த்தமற்ற வார்த்தைகளின்

கோர மாலை 

கழுத்தை சுற்றி இறுக்கிக்

கணம் கொண்டு கிடக்கிறது



அதன் பிடியில் இருந்து

அறுத்துக்கொண்டு

வெளிவர முயன்று

தோற்று நிற்கும்

இந்த நொடி என் வலிமையின்

சுயம் காட்டி நிற்கிறது



வெறும் நீர்மைச் செதில்களை கொண்டு

வெற்று படகை இயக்கி கொண்டிருக்கிறேன்

என்ற உண்மை உணர

ஒரு நதியின் தொலைவை

கடக்க வேண்டியிருக்கு 


இப்போது நடுக்கடலில்

கலந்து நிற்கும் நதியின்

போக்கில் பெருத்த மாற்றம் 


நேர்கொண்ட விசையற்று

சுழன்று நிற்கும் அதன்

மத்தியில் மூச்சற்று நிற்கிறேன்

ஒரு உயிரற்ற மரத்தை போல


மீண்டும் கரை சேருவேனோ ?

இல்லை கடல் சேருவேனோ ?

காலம்தான் சொல்ல வேண்டும்

நாட்குறிப்பின் முந்தைய நாட்கள் - 28

$
0
0

வடிகட்டாமல் நீ
அனுப்பும் வார்த்தைகள்
மன அறைகளில் ஜீரணமாகாமல்
முழுதாய் கிடக்கிறது ....

நீ அருகில் இல்லாத
நாட்களில் அவற்றை
அசைபோடுகிறேன்
ஒரு ஆட்டுக்குட்டியை போல

நாட்குறிப்பு (சூல் கொண்ட வானம் )

$
0
0

கர்ப்பம் தரித்த மேகமென 
கனத்து கிடக்கும் மனதின் 
சுமைகளை 
மழை என பிரசவித்து விட 
நினைத்து நிலம் பார்த்து 
நிற்கிறேன் .


வாடை காற்றென வந்து 
மேகம் கலைத்து போகிறாய் 
கருக்கலைத்த வலியோடு 
திரும்புகிறேன் 
திரும்பும் திசையெங்கும் 
சூல்கொண்டு நிற்கிறது 
வானம் 

"பிறருக்கு உதவுவோம் "

$
0
0
23.06.2013 ஞாயிறு காலை 10. 00அளவில் குனியமுத்தூர் ,முத்துசாமி முதலியார் திருமண மண்டபத்தில் " பிறருக்கு உதவுவோம் " என்ற பொதுநல இயக்கம் 600 பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள் ,நோட்டுகள் அடங்கிய பள்ளிக்கு எடுத்துச் செல்லும் புத்தக பையையும் இலவசமாக கொடுக்க ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் .


அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்பு உரையாற்ற நண்பர் நிர்மல்குமார் அவர்கள் ( தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு மையத்தின் சிறப்பு ஆலோசகர் ) என்னை அழைத்தார் .மாணவர்களுக்கு நல்ல செய்திகளை சொல்ல வேண்டியது என் கடமையென கருதி உடனே ஒப்புக்கொண்டேன் .


நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன் அங்கு சென்று காத்திருந்தோம் நல்ல வரவேற்ப்பு .இளைஞர்கள் ஒன்றுகூடி ஒரு சமூக சேவையை செய்வதை இப்போதெல்லாம் பார்ப்பது குறைந்து போன சூழலில் அந்த இளைஞர்கள் சிறப்பானவர்களாக தெரிந்தார்கள் .


மேலும் பத்து ,பனிரென்று வகுப்புகளில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவ ,மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை மேடையில் அமர செய்து அவர்களுக்கு சந்தன மாலை அணிவித்து அவர்களை கௌரவித்தார்கள் 

                                    நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாணவ செல்வங்கள் 


                                       கல்வியின் சிறப்பை பற்றி கோவை மு சரளா உரையாற்றுகிறார் 



எனக்கு ஆச்சர்யமாக இருந்தது .


அந்த ஆச்சர்யம் குறையும் முன் இன்னொரு ஆச்சர்யம் .அந்த நிகழ்ச்சயில் மாணவர்களுக்கு புத்தகம் வாங்க நன்கொடை வழங்கியவர்களை கௌரவித்தார்கள் அவர்கள் யார் ? என்று நீங்கள் நினைகிறீர்கள் .நிச்சயம் ஒரு பணம் படைத்தவரோ ? ஒரு நிறுவனத்தின் இயக்குனரோ இல்லை .மிக சாராதனமான கூலி தொழில் செய்யும் நபர்களும் ,துப்புரவு பணியாளர்களும் ,சாலை பணியாளர்களும் ,வயதான ஒரு பாட்டியும் அவர்களை கண்டு எனக்கு வெட்கமாகிபோனது அவர்களுக்கு முன் நாம் செய்யும் கொடைகள் மிகச் சாதரனமாகிபோனது .


ஒரு நாள் உணவிற்கு கஷ்டப்படும் சூழலில் ஒருவரின் படிப்பிற்கு ஒரு நோட்டு வாங்கி தரனும் என்று நினைக்கும் அந்த மனங்கள் கர்ணனின் கொடை உள்ளம் படைத்த உள்ளங்கள் .நான் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கினேன் .


பின் குழந்தைகளின் சிறப்பான வாழ்வுக்கு சில வழிமுறைகளை சொல்லிவிட்டு தமிழின் பெருமையை உரக்க பேசிவிட்டு அடுத்த ஒரு நிகழ்ச்சிக்கு பேச செல்லுவதால் விடைபெற்றுக்கொண்டேன் .


நீங்கள் இந்த பொதுநல இயக்கத்திற்கு உதவ நினைத்தால் கீழே கொடுக்கப்பட்ட என்னை தொடர்புகொள்ளுங்கள் அடுத்த நிகழ்ச்சியில் உங்கள் கையால் நீங்கள் அவர்களுக்கு கொடுத்து உதவலாம் உங்களை யும் மலர் மாலை அணிவித்து அவர்கள் வரவேற்பார்கள் .


ராஜா சேது முரளி : 93809 05800, 9789189444





உள்ளத்தின் ஓசை -30 ( சமநிலை)

$
0
0

"புத்தரிடம் ஒரு அரசர் வந்தார் . மிகப் பெரிய செல்வந்தர். மிகுந்த ஆணவம் கொண்டவர். நிறைய வசதிகள் பெற்றவர். ஆடம்பரங்களில் ஊறித் திளைத்தவர். எதிரிகளை ஓட ஓட விரட்டகூடிய படை வலிமை மிக்கவர் அவர் எச்சிலைப் பிடிக்க ஏராளமானோர் கையில் கோப்பையுடன் காத்திருந்தனர் .

ஆனால் அவர் புத்தரிடம் வந்தபோது எல்லோருக்கும் ஆச்சர்யம் இவர் மடாலயத்தின் விதிமுறைகளை கடைபிடிப்பார? இந்த எளிய உணவும், அனைத்தையும் துறந்த நிலையும் இவருக்கு எப்படி கைவரப் பெரும் என்று சந்தேகபட்டனர் .

ஆனால் புத்தர் அவரை சிரித்துக் கொண்டே ஏற்றுகொண்டார் .ஒரு வருடத்திற்கு பின்பு அவரை விட எளிமையானவர்கள் இல்லை என்பது போல அவர் நடந்து கொண்டார் குளிரிளும் கூட கட்டாந்தரையில் படுப்பதும் ,குளிரை உள்வாங்கி கொண்டு துயிலுவதும் என்று இருந்தவர் சில நாட்களில் உடல்நிலை இளைத்து மெலிந்து காணப்பட்டார் .

புத்தரிடம் அவரை பற்றி சிஷ்யர்கள் கூறவும் அவர்களிடம் புத்தர் கூறியது " மனம் எப்போதும் எல்லையைத் தொட நினைக்கும் அரசனாக இருக்கும் போது தன்னைக் காட்டிலும் சிறந்த அரசன் இருக்ககூடாது என்று நினைத்தார். அதேபோல செயல்பட்டார். துறவி ஆனபோது தன்னைக் காட்டிலும் சிறந்த துறவி யாரும் இருக்க கூடாது என்று அவர் விரும்புகிறார் .இதில் வியக்க ஒன்றும் இல்லை என்றார் .

புத்தர் அவரை அழைத்து " ஒரு வீணையின் நரம்புகளை மிகவும் முறுக்கினால் என்னவாகும் ?என்று கேட்டார் "வீணையின் நரம்புகள் அறுந்து போகும்" என்று அவர் சொன்னார்.

"வீணையின் நரம்புகளைத் தளர்த்தினால் என்னவாகும் ? என்று புத்தர் கேட்க "நரம்புகளைத் தளர்த்தினால் இசை வெளிவராது. இசையினைக் கேட்க முடியாது " என்று அவர் பதில் அளித்தார் .

"அதைப் போலவே நீ இறுக்கி கட்டவும் வேண்டாம் தளர்ந்து விடவும் வேண்டாம் இயல்பாய் நடுத்தன்மையோடு இருப்பாயாக என்று கூறினார் .

இந்த கதையை இயல்பாக இருந்தாலும் .யார் சமீபத்தில் ஆத்திகர்களானர்களோ? அவர்கள் பூஜைகளை அதிகமாக செய்வார்கள் நாத்திகத்தை வெறுப்பார்கள்.

இரண்டு பேர் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்தால் அதே போல மிகச்சிறந்த எதிரிகளாகவும் ஆகிவிடுவார்கள் .யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ ?அவர்களிடம் தான் அதிகமான வெறுப்பும் ஏற்படுகிறது .

இதற்கு என்ன காரணம் ? மனித மனம் எப்போதும் ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு பயணமாவதைதான் விரும்புகிறது .மனம் எல்லையை விட்டு எல்லை தாண்டவே யோசிக்கிறது .சமநிலையில் இருக்கவே விருப்பபடுவதிலை .இது மனிதனின் இயல்பு .

ஒருவனுக்கு இனிப்பையே மூன்று வேலையும் கொடுத்தால் அவனுக்கு இனிப்பின் மீது வெறுப்பு ஏற்படுகிறது .குழந்தை பருவத்தில் குறும்பு செய்பவர்கள் வாலிப பருவத்தில் அமைதியாவதை நாம் பார்க்கிறோம் ஆகவே எதை முழுமையாக உட்கொள்கிறோமோ ?அதை அதே அளவிற்கு வெளியிட வேண்டும் என்பது இயற்கையின் கட்டளை அதை மீறி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது .

அதிகமாக பேசியவர்களால் தான் அதிகமான மௌனத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியும் .

ஆகவே வாழ்கையை சமநிலையில் வாழ கற்றுகொள்ளுங்கள் எதையும் அதிகம் திணிக்காதீர்கள் அதிகம் பெற்றுக்கொள்ளாதீர்கள் .அப்போதுதான் உங்கள் வாழ்வு சந்தோசமாக இருக்கும் .

கண்ணன் என் காதலன் - 27 ( மலரும் நாள் )

$
0
0


எப்பாடு பட்டாவது
உன் பொற்பாதம் தொட
ஓடோடி வருபவர்களுக்கு
மத்தியில்

உன் மலர் மார்பில் அணியும்
மாலையாக ஆசை கொண்டு
ஒரு மாலையை கட்டுகிறேன்

என்னை நாராக்கி மனதை
பூவாக்கி கட்டியபின்
மணக்க மணக்க

உனக்கு சூட்டி மகிழ்கிறேன்
மாலையெல்லாம் என் சேலையாக
காட்சியளிக்க
அந்த சேலைச் சோலையில்
வீற்றிருக்கும் நந்தகுமாரா

இந்த பாவையின் மனம் அறிந்து
மனம் இரங்கி வருவாயா
தருவாயா உன்னைத் தருவாயா ?

மலர்வண்ண கண்ணா
நீலம் போர்த்திய உன் மேனியில்
ஒரு மச்சமென ஒட்டிக்கொள்ள
இடம் தருவாயா ?

கன்னியரை கவரும்
கந்தர்வ கண்ணா உன்
கடை கண் பார்வையில்
என் உயிர்பூவை மலரச் செய்வாயா ?

உனக்காகவே கட்டியிருக்கிறேன்
என் மனதில் ஒரு மலர் கோட்டை
அது சருகாகிவிடுவதற்குள்
அதன் மனம் நுகர்ந்து போவாயா
அதில் உன் மலர் மார்பை சாய்ப்பாயா ?

உன் அங்கம் அலங்கரிக்கும்
நாளுக்காக இப்போதே
பூத்து நிற்கும் இந்த மங்கைக்கு
காட்சியளிக்கும் நாள் எப்போது ?

முரண் சுவை

$
0
0

இரவில் தன்னிசையாக
இயங்கும் உன் விரல்களுக்குள்
கசியும் வெப்பத்தை கொண்டு
வேக வைக்கிறாய்


வெளியெங்கும் தகித்தாலும்
உள்ளே நீர்மையின்
குளுமையை உணரும்
தருணம் அது


சற்றென்று நிகழ்ந்து விடுகிறது
ஒரு போர்க்கால ஒத்திகை
மெல்ல விடுவிக்கப்பட்டு
ஒரு ஆசுவாசத்தின்
கிளைபற்றி மேலெழும்ப
ஒரு முழு இரவை
துணைக்கு அழைக்கிறேன்


வெப்பம் தகிக்கும்
வெளிகளில் ஊசியின்
கூர்முனைகளால் உரிஞ்சப்படுகிறேன்


விட்டு விடுதலையாகி நிற்கும் போது
நீர் சரடுகளால் கட்டப்பட்டு
சிறையில் துயிலுகிறேன்

இந்தியன் எக்ஸ்ப்ரஸில் என்னுடைய நேர்காணல்

$
0
0


ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ள இந்த பதிவை எழுதுகிறேன் .


எழுத்தின் மீது எனக்கிருந்த அசைக்க முடியாத காதலின் வெளிப்பாடாக என்னுடைய வார்த்தைகளை கவிதைகளாக தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 2012 ம் ஆண்டு நவம்பர் மாதம் "மௌனத்தின் இரைச்சல் " என்ற தலைப்பில் என் கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்பட்டது இந்த வெளியீட்டில் என்னுடைய தோழி அகிலாவின் "சின்ன சின்ன சிதறல் " கவிதை நூலும் நண்பர் ஜீவா அவர்களின் " கோவை நேரம் என்ற பயண கட்டுரை நூலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .என்னுடைய தொகுப்பு முழுவதும் பல்வேறு சூழலில் எனக்குள் எழுந்த பல உணர்வுகளை மையபடுத்தி எழுதியிருக்கிறேன் .தாய்மொழியின் மீது கொண்ட காதல் ,நம் பண்பாடு , கலாசாரம், மூடநம்பிக்கை ,தனிமனிதனின் வேதனை அவமானம் ,கோபம்,மகிழ்ச்சி ,ஆவேசம் ,காதல், காமம் என்று பல்வேறு இரைச்சல்களை வெளிப்படுத்தியிருகிறேன் .


அதன் பின் அந்த புத்தகத்தை விற்பனை செய்வதற்காக பதிப்பகங்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ள புத்தகங்களை நூலகங்களுக்கும் ,தோழிகள் நண்பர்கள் அறிவுரைபடி சில விருதுகளுக்கும் அனுப்பி வைத்தேன் அதற்கு காரணம் அந்த விருது வழங்கும் தேர்வு குழுவினராவது அவசியம் படிப்பார்கள் என்ற ஒரு நப்பாசை .


அதன் பின் என்னுடைய அடுத்தகட்ட புத்தகத்திற்கான பணியில் ஆயத்தாமாகிவிட்டேன் அந்த புத்தகத்தின் பெயர் " காதலின் சாரல் " இந்நூல் கோவை விஜயா பதிப்பகத்தால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது .முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் அகம் சார்ந்த காதல் உணர்வுகளால் நிரம்பி வழியும் இந்த நூலின் விலை 30 ரூபாய் தான் .படிப்பவர்கள் நிச்சயம் காதல் உணர்வுகளை கடக்காமல் வெளிவர முடியாது .இந்த நூலை பற்றிய விமர்சனத்தை மரியாதைக்குரிய நண்பர் பாலா அவர்களின் "மின்னல் வரிகள்" தளத்தில் பார்க்கலாம் .


இதற்கிடையில் கடந்த மாதம் திருப்பூர் அரிமா சங்கம் என்னுடைய "மௌனத்தின் இரைச்சல் " என்ற நூலை "சக்தி விருதிற்காக "தேர்வு செய்து விருதையும் வழங்கியது . இந்த விருது என் எழுத்திற்கான அங்கீகாரமாக இருப்பதோடு தகுந்த காலத்தில் ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் மிகச் சிறப்பான பணியையும் செய்திருந்தார்கள் .சமகால எழுத்தாளர்களுக்கும் ,குறும்பட இயக்குனர்களுக்கும் விருதை வழங்கி அவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் பணியை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் .

மேலும் திருப்பூரில் தொழிற்களம் நடத்திய :உறவோடு உறவாடுவோம் என்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் "தமிழ் என் அடையாலாம் "என்ற தலைப்பில் நான் பேசினேன் இந்த நிகழ்விற்கு மதுரை மாவட்டத்தில் முன்னாள் ஆட்சியாளர் திரு. சகாயம் அவர்கள்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து பல பட்டிமன்றங்களுக்கும் ,கவி மன்றங்களுக்கும் அழைப்பு வந்தாலும் என் பணி சூழல் மற்றும் ஆய்வு பணி காரணமாக என்னால் வெளியூர்களுக்கு செல்லமுடியாத காரணத்தால் அந்த வாய்ப்புகளை தவிர்த்துவந்தேன்.அப்படி இருந்தும் சில நிகழ்சிகளில் கலந்துகொள்வதை தவிர்க்க முடியவில்லை காரணம் அது மாணவர்களுக்கான நிகழ்வாகவும் ,பெண்களுக்கான நிகழ்வாகவும் இருப்பதால் .கடந்த மாதம் அப்படி ஒரு திடீர் அழைப்பு "பிறருக்கு உதவுவோம் "என்ற தன்னார்வ தொண்டு நடத்தும் மாணவர்களுக்கான இலவச புத்தகங்களும் புத்தக பைகளும் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு கல்வியின் சிறப்பை பற்றியும் ,தமிழின் சிறப்பையும் பற்றியும் பேசினேன் .


அதற்கடுத்த தினங்களிலே கோவை அரிமா சங்கத்தினர் நடத்திய ஒரு விழாவில் "தொண்டும் தோழமையும் " என்ற தலைப்பில் இன்றைய சமூகத்தின் சிக்கல்களை மையப்படுத்தி நட்பின் தேவையைப் பற்றி பேசினேன் .

 
அந்த மகிழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் செய்து ஆசிரியர் திரு .மீனாட்சி சுந்தரம் அவர்கள் என்னுடைய அலைபேசியில் தொடர்புகொண்டு என் புத்தகம் குறித்து பேசினார் .உங்களோடு ஒரு நேர்காணல் மூலம் உங்களை பற்றியும் உங்கள் புத்தகங்களை பற்றியும் அறிந்துகொள்ள நினைக்கிறேன் என்றும் அந்த நேர்காணல் வெள்ளி கிழமை சிட்டி எக்ஸ்ப்ரஸில் வெளிவரும் என்று சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தால் இரண்டு நாள் கழித்து அவரோடு தொடர்புகொண்டு பேசினேன் .முதலில் அவரை பற்றிய அறிமுகம் செய்து கொண்டார் தானும் ஒரு படைப்பாளி என்றும் இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதாகவும் சொன்னார் .அதன் பின் என் கவிதைகளில் சில வரிகளை சொல்லி அதை ஒரு வாசகனாக ரசித்ததாக சொன்னார் .


அதன் பின் கேள்வி கணைகளை என்மீது தொடுத்தார் பல சிக்கலான கேள்விகளை முன் வைத்தார் அவற்றிற்கான பதில்களை நான் என்னுடைய பார்வையில் காட்சி படுத்தினேன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பல கேள்விகளும் கருத்து விவாதங்களுமாக நிமிடங்கள் கடந்து போனது .அவரிடம் பேசிய அந்த நிமிடங்களில் அவரின் அசாத்திய அறிவு என்னை பிரமிக்க வைத்தது பல தளங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார் ,அனுபவசாலியும் கூட ஆங்கில உச்சரிப்பு மிக நேர்த்தியாக இருந்தது தமிழில் பேசும்போது அதே நேர்த்தி. அதன் பின் நேர்காணல் முடிவடைந்தது .


நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாளின் சிறப்பு பக்கமாக வெளிவந்த சிட்டி எக்ஸ்ப்ரஸில் என்னுடைய நேர்காணல் புகைப்படத்துடன் வெளிவந்திருகிறது அது குறித்து நண்பர்  கோவை நேரம் ஜீவா நேற்றே பதிவு செய்திருக்கிறார்.


இந்த நகர்வு எனக்குள் பெரும் சப்தத்துடன் கூடிய அலைகளை பிரசவித்துக்கொண்டே இருக்கிறது .அதன் துள்ளலிலும் துடிப்பிலும் நான் கட்டுண்டு கிடக்கிறேன் .இந்த மகிழ்ச்சி நான் வலைதளத்திற்கு வந்தபின் இரட்டிப்பாகி இருக்கிறது காரணம் இந்த வலையுலக நண்பர்களின் பின்னூட்டங்களும் ,கருத்துகளும் என் எழுத்தை மேலும் வளப்படுத்திக் கொண்டிருகிறது ஆகையால் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிருவதில் எனக்கு இரட்டிப்பு இன்பம் .



இந்த பதிவை எழுத காரணம் எழுத்தின் மீது என்னுடைய தேடுதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை சொல்லுவதற்காகத்தான் மேலும் குடும்பம் ,சமூகம் ,அலுவலகம் என்று பல்வேறு கட்டமைப்புகளுக்குள் நாம் நம் இருப்பை பதிவு செய்து கொண்டிருந்தாலும் அதை தாண்டி புத்தக வாசிப்பிலும் அதை மற்றவர்களுக்கு சொல்லுவதிலும் இருக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் .


" தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனை தூறும் அறிவு."

என்பதை போல நாமும் நம் அறிவை மற்றவர்களோடு பகிர வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்
Viewing all 164 articles
Browse latest View live